பல்டி! 'நான் அப்படி சொல்லல..' மீண்டும் விவசாய சட்டங்கள் என்ற சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்
போபால்: வோளண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என அமைச்ச நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நவ. இறுதியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் சுமார் ஓராண்டாகத் தொடர்ந்தது.
10 ஆண்டு பிளான்.. இனி சட்டசபையில் என்ன நடந்தாலும் பார்க்கலாம்.. முதல்வரின் முக்கிய
சுமார் ஓராண்டாக நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பலரும் உயிரிழந்தனர். விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றே மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தனர்.
பிரதமர் மோடி அறிவிப்பு
இருப்பினும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும் இருப்பினும், சிலருக்கு இதைப் புரிய வைக்க முடியவில்லை என்பதால் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மீண்டும் விவசாய சட்டங்கள்?
இருப்பினும், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் சாடினர். இந்தச் சூழ்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியது.. இது தொடர்பாக அவர் கூறுகையில், "விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் சிலருக்கு இந்தச் சட்டங்கள் பிடிக்கவில்லை.
சர்ச்சை பேச்சு
சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு அடி பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்" என்று அவர் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள விளக்கத்தில், "நான் அப்படிச் சொல்லவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல சட்டங்களைக் கொண்டு வந்தது என்று நான் கூறினேன். சில காரணங்களால் அதைத் திரும்பப் பெற்றோம். இருப்பினும் விவசாயிகளின் நலனுக்காக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றே நான் கூறினேன்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் காங்கிரஸ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பாய்ச்சல்
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில். அதை அவமதிக்கும் வகையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மூன்று விவசாய சட்டங்கள் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காகவே வாபஸ் பெறப்படுவதாகவும் இவை மீண்டும் கொண்டு வரப்படும் என்பத்தையே அமைச்சரின் இந்தப் பேச்சு காட்டுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா சாடியுள்ளார்.