உத்தரகாசியில் பஸ் கவிழ்ந்து விபத்து..சார்தாம் யாத்திரை சென்ற 26 பக்தர்கள் பலி..மோடி இரங்கல்
உத்தராகண்டில் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள டம்டா அருகே யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்டது. இதில், 22 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் 30 பேர் பயணம் செய்துள்ளனர். தகவல் அறிந்ததும் உத்தரகாசி மாவட்ட ஆட்சியரும் மீட்பு படையினரும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புஅதிகரிக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில் தற்போது மேலும் சிலர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'உத்தரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications