இந்திய பகுதியை ஆக்கிரமித்தது கிராமத்தையே உருவாக்கிய சீனா.. அருணாச்சல பிரதேச பாஜக பகீர் ட்வீட்!
இடா நகர்: இந்திய நிலப் பகுதியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ஒரு கிராமத்தையே சீனா உருவாக்கிவிட்டதாக அருணாச்சல பிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் வடகிழக்கில் சீனா எல்லையில் உள்ளது அருணாச்சல பிரதேசம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதலே அருணாச்சல பிரதேசம் தொடர்பான எல்லை விவகாரம் நீடித்து வருகிறது. 1914-ல் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரம் தொடர்பான முத்தரப்பு பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சீனா இந்த பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதன்பின்னர் மக்மெகன் எல்லைக் கோடு வரையறை உருவாக்கப்பட்டது.
நாடு விடுதலை அடைந்தது முதல் அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடுகிறது சீனா. 1962-ம் ஆண்டு யுத்தத்தின் போதும் சீனா வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிப்பதில் பெரும் தீவிரம் காட்டியது. இப்போதும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்வதற்கான தொடர் முன்னெடுப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் பிரதான நிலப் பகுதியையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடியது டோக்லாம் பீடபூமி. இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையில் டோக்லாம் பீடபூமி உள்ளது. டோக்லாமின் பாதுகாப்பை நமது ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்த டோக்லாமை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தும் வருகின்றனர்.
அத்துடன் அருணாச்சல பிரதேசத்துக்கு நமது நாட்டு மத்திய அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் பயணம் மேற்கொண்டாலே, எங்களுடைய தெற்கு திபெத்துக்கு ஏன் பயணம் செய்ய வேண்டும் என்று எகத்தாளமாக கேட்பது சீனாவின் வாடிக்கை. அருணாச்சல பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் எல்லையில் இந்தியர்களை கடத்திச் சென்று சித்ரவதை செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறது சீனா.
இந்தப் பின்னணியில் கடந்த 9-ந் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவம் ஊடுருவியது. சீன ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் கும்பல் கும்பலாக தவாங் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் சீன ராணுவ வீரர்கள் தங்களது நிலைக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. நமது இந்திய வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது; உயிரிழப்போ, படுகாயமடையவோ இல்லை என தெரிவித்திருந்தார். அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு, 1962-ம் ஆண்டு யுத்தம் போல சீனா நினைத்துக் கொள்ள கூடாது. இந்திய தரப்பில் இருந்து கடும் பதிலடி கிடைக்கும் என எச்சரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேச பாஜகவினர் சீனாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். இடா நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சீனாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சீன அதிபரின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக அருணாச்சல பிரதேச பாஜக தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்திய எல்லைக்குள் சீனா சட்டவிரோதமாக ஒரு கிராமத்தையே உருவாக்கியிருப்பதை அருணாச்சல பிரதேச பாஜக கடுமையாக கண்டித்து போராட்டம் நடத்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவுக்குள் நுழைந்து இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து சீனா ஒரு கிராமத்தையே உருவாக்கி இருப்பதாக அருணாச்சல பிரதேச பாஜக பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications