வறட்சி பாதித்த மாநிலங்களில் ‘செயற்கை மழை’... இந்தியாவுக்கு உதவும் சீனா
மும்பை: நாட்டில் கடும் வறட்சி பாதித்த பகுதிகளில், சீனாவின் உதவியுடன் செயற்கை மழையை பெய்ய வைக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அப்பகுதிகள் வறட்சியில் வாடுகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை காணப்படுகிறது.
எனவே, இந்த நிலையை மாற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் செயற்கை மழை மூலம் வறட்சியைப் போக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க சீனாவும் முன்வந்துள்ளது.
சீனா முதலிடம்...
செயற்கை மழை உண்டாக்கும் தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அப்போது பீஜிங் நகரில் காற்று மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அங்கு காற்றை சுத்தப்படுத்தி, நீல வானத்தை உண்டாக்கி சீன விஞ்ஞானிகள் ஆச்சர்யப் படுத்தினர்.
செயற்கை மழை தொழில்நுட்பம்...
இந்நிலையில், கடந்த மாதம் இந்தியா வந்திருந்த சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் நகர செயலர் ஹான் ஸெங், செயற்கை மழை பெய்விக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு இலவசமாக தருவதாக கூறினார்.
மும்பையில் ஆய்வு...
அதன் தொடர்ச்சியாக பீஜிங், ஷாங்காய் நகரங்களைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானிகள் தற்போது மும்பையில் தங்கி, மகாராஷ்டிராவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இருப்பினும், செயற்கை மழையை உருவாக்கும் சீனத் தொழில்நுட்பம் இந்தியாவில் எந்தளவுக்கு சாத்தியம் என்பது ஆய்வின் இறுதியிலேயே தெரிய வரும்.
2 வகைகளில்...
பொதுவாக செயற்கை மழையைப் பெய்ய வைக்கும் கருமேகங்களை இருவழிகளில் உருவாக்குகின்றனர். அதன்படி, முதல் வகையில் பெரிய பீரங்கி அல்லது கனரகத் துப்பாக்கிகள் மூலம், கருமேகங்களை ஈர்க்கும் வேதித்துகள்கள் வானில் செலுத்தப்படும். இரண்டாவது வகையில்,விமானங்கள் மூலம் இந்த வேதிப்பொருட்கள் வானில் துாவப்படுகின்றன.
நீர் மாசுபடும் அபாயம்...
இது ஒருபுறம் இருக்க, இவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழையை உண்டாக்கினால், நீர் மாசுபடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.