பீகார்: சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி எம்.பி.க்கள் 5 பேர் கூண்டோடு ஜேடியூவுக்கு தாவுகின்றனர்!
பாட்னா: பீகாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் 6 எம்.பி.க்களில் 5 பேர் கூண்டோடு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு (ஜேடியூ) தாவ உள்ளனர். சிராக் பாஸ்வானின் உறவினர்களான பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ் ராஜ் ஆகியோரும் ஜேடியூவுக்கு கட்சி தாவுகின்றனர்.
பீகார் சட்டசபை தேர்தலின் போது பாஜகவின் பி டீமாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி செயல்பட்டது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்று திட்டம் போட்டது பாஜக.

இதனால் சிராக் பாஸ்வானில் லோக் ஜனசக்தியை ஜேடியூவுக்கு எதிராக களமிறக்கியது பாஜக. இத்தனைக்கும் பாஜகவின் கூட்டணி கட்சியாகத்தான் ஜேடியூவும் களத்தில் நின்றது. ஜேடியூவின் தலைவர்கள் பாஜகவுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் சிராக் பாஸ்வான், ஜேடியூவுக்கு எதிரான வேட்பாளர்களை வாபஸ் பெறவில்லை.
இப்படி முதுகில் குத்திய காரணத்தாலேயே பீகாரில் ஜேடியூவைவிட பாஜக அதிக இடங்களில் வென்றது. இதனை ஜேடியூ தலைவர்கள் பகிரங்கமாக விமர்சித்தனர். இருந்தபோதும் ஜேடியூ- பாஜக ஆட்சி பீகாரில் நடைபெற்று வருகிறது.
இப்போது சிராக் பாஸ்வானுக்கு எதிரான அவரது உறவினர்களான பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ் ராஜ் உள்ளிட்டோர் தலைமையில் 5 எம்.பிக்கள் கூண்டோடு ஜேடியூவுக்கு தாவுகின்றனர். மேலும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, லோக்சபாவில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்க கோரியும் இந்த 5 எம்.பிக்களும் கடிதமும் அனுப்பியுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சிராக் பாஸ்வானுக்கும் இடம்கிடைக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சிராக் பாஸ்வானிடம் இருந்து ஒட்டுமொத்த எம்.பிக்களும் கூண்டோடு விலகி இருப்பது பரபரப்பான திருப்பமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications