மத்திய அரசுக்கு எதிராக "பிரம்மாஸ்திரம்.." கையிலெடுத்த மம்தா பானர்ஜி! ஜிஎஸ்டி வரி இனி கட்- வார்னிங்
கொல்கத்தா: மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும்.. இல்லையென்றால் ஜிஎஸ்டி வரி வழங்குவதை நிறுத்தவேண்டியிருக்கும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மம்தா பானர்ஜி வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாற்றாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை
அதேபோல், தனது விசாரணை அமைப்புகள் மூலம் தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாநில அரசுகளை பாஜக ஒடுக்க நினைப்பதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி பேச்சு
மேற்கு வங்க மாநிலம் ஜஹரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இந்த மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காளத்தின் மூத்த அமைசர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் விழாவில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-

அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும்
மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை மத்திய அரசு கண்டிப்பாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மத்திய அரசின் இத்தகைய போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்
எங்களுக்கு வர வேண்டிய நிதி உதவியை கொடுங்கள் என பிச்சை எடுக்க வேண்டுமா? மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு விடுவிக்க வில்லையென்றால் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும். நிதியை வழங்க முடியாவிட்டால் மத்தியில் ஆளும் பாஜக அரசு பதவியில் இருந்து விலக வேண்டும்" என்றார்.

ஜனநாயகத்தில் தான் வசிக்கிறோமா?
மேலும் அவர் கூறுகையில், ''நாம் ஜனநாயகத்தில் தான் வசிக்கிறோமா? அலது இந்தியா ஒரு கட்சி நாடாக மாறிவிட்டதா? எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை கொடுங்கள். இது எங்கள் பணம். அவர்கள் (பாஜக) எங்களுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்துவதாக எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இங்கே வரியை வசூலிக்க முடியாது
எங்களாலும் ஜி.எஸ்.டியை நிறுத்த முடியும். உங்களால் இங்கே வரியை வசூலிக்க முடியாது. அதேபோல் எங்களுக்கு சட்டப்பூர்வமாக வரவேண்டிய நிலுவைத்தொகையை நிறுத்தி வைக்க முடியாது. மேற்கு வங்காள மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்கள்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications