ஜிஎஸ்டியால் படுபயங்கர கோபத்தில் பொதுமக்கள்.. நைசாக காங். மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் பாஜக!
ஜிஎஸ்டியால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் காங்கிரஸ் மீது பழிபோடுகிறது பாஜக.
Recommended Video
அகமதாபாத்: ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பாஜக மீது மக்கள் படுபயங்கரமான அதிருப்தியிலும் வெறுப்பிலும் இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பாஜக மட்டுமல்ல காங்கிரஸும் பொறுப்பு என பிரதமர் மோடி பேசத் தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என முழங்கியது பாஜகதான். ஒரே நாடு ஒரே வரி என்ற கோஷத்துடன் ஜிஎஸ்டியை திணித்ததும் பாஜகதான்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பின் போதும் ஜிஎஸ்டி திணிப்பின் போதும் புதிய இந்தியா பிறக்கிறது என கர்ஜித்தது பாஜக. ஆனால் பாஜகவின் அறிவிப்புகளால் இந்தியர்கள் நித்தம் நித்தம் செத்து பிழைத்ததுதான் யதார்த்தமாகிவிட்டது.
பாஜகவுக்கு மரண அடி
இந்த பெருங்கோபத்தின் வெளிப்பாடுதான் கேரளாவின் வெங்காரா, பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் இடைத்தேர்தல்களில் வெளியானது. பாஜகவுக்கு கிடைத்த மரண அடியால் அக்கட்சித் தலைவர்கள் அலறிப் போய் கிடக்கின்றனர்.
மோடிக்கு அக்னி பரீட்சை
அதுவும் குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு குறிப்பாக பிரதமர் மோடிக்கு இது அக்னி பரீட்சைதான். குஜராத்தின் சூரத்தில்தான் வரலாறு காணாத வகையில் ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க முடியாது என்பதை உணர்ந்துதான் தேர்தல் தேதி அறிவிப்பதில் ரொம்பவே தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் பேச்சு தொனி களையிழந்தே காணப்பட்டது.
காங்கிரஸுக்கும் பங்கு
வழக்கம் போல காங்கிரஸை சகட்டுமேனிக்கு சாடித் தள்ளக் கூடியவர் பிரதமர் மோடி. ஆனால் இப்போது சரணாகதி படலத்தை தொடங்கிவிட்டார் என்றே கூறலாம். நாட்டையே முடக்கிப் போட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பாஜக மட்டுமே காரணமல்ல.. காங்கிரஸுக்கும் சம பங்கு இருக்கிறது.. 30-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது.. மாநில அரசுகளும் காரணம் என அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார் மோடி.
அலறல் ஓலம்
புதிய இந்தியாவை பிறப்பிக்கப் போவதாக உதார் விட்ட அவதார புருஷர்கள் இப்போது மக்களின் வெறுப்பால் உளறிக் கொட்டத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைத்தான் பிரதமரின் இந்த பேச்சு காட்டுகிறது. குஜராத் களநிலவரம் களேபரத்தைத் தந்துவிடும் என்பதால் எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் நாசமாகிப் போய்விட்டது. இப்படி நாசமனால் எதிர்க்கட்சிகளும் பங்காளிகள் என்பதும் சாதித்துவிட்டால் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்தோம் என சட்டாம்பிள்ளைத்தனமாக பேசுவதும் பாஜகவின் பாணி. இதைத்தான் பாஜகவின் இத்தகைய தொடைநடுக்க பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.