வேட்பாளர்களை அறிவித்து தேசியவாத காங். கூட்டணிக்கு கதவை சாத்திய காங்.!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு கதவை சாத்தியுள்ளது காங்கிரஸ்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசிநாள்.
ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பெரும் பிரளயமாக வெடித்துள்ளது. பாஜக அணியைப் பொறுத்தவரையில் சிவசேனா 151 தொகுதிகளிலும் பாஜக 130 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டு கால் நூற்றாண்டுகால கூட்டணிக்கே வேட்டு வைத்துவிட்டது
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அணியில் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு அறிவிக்காத நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மேலிடம் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
காங்கிரஸ் மேலிடம் நேற்றிரவு வெளியிட்ட அப் பட்டியலில் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், உட்பட அமைச்சர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பிரிவித்விராஜ் சவான், ஏற்க முடியாத நிபந்தனைகள் விதிக்கப்படுமானால், தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியில் நீடிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்பட்டால், பாதி காலத்திற்கு தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.
இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கான கதவுகளை இறுக மூடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.