போன தேர்தலில் 3 சீட்டா ஒதுக்கினீங்க.. லாலுவுக்கு ஆப்படித்த ராகுல்!!
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி அவமானப்படுத்திய லாலுவை மாட்டுத் தீவன ஊழல் வழக்கு மூலம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பழிவாங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2009 தேர்தலில் லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் மூன்றும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தது.
அசிங்கப்படுத்திய லாலு
ஆனால் 40 தொகுதியில் தமது ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 25 தொகுதிகளையும் பாஸ்வானின் லோக் ஜன் சக்திக்கு 12 தொகுதிகளையும் ஒதுக்கிக் கொண்ட லாலு, காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அவமானமாகிப் போனது.
3 தொகுதிகள்தான்
அதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் 2009-ல் மூன்றே தொகுதிகளை ஒதுக்கியதால் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டது.
எந்த முகத்தை வெச்சுக்கிட்டு போறது- குமுறிய ஷிண்டே
அத்துடன் அப்போது கருத்து தெரிவித்திருந்த தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கள் கட்சியின் தொண்டர்களின் முகத்தை எப்படி பார்ப்பது என்று கூட தெரியவில்லை. இதனால் நாங்களாகவே எத்தனை தொகுதிகளில் முடியுமோ அத்தனை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து விட்டோம் என்று கொந்தளித்திருந்தார்.
பழி தீர்த்த காங்கிரஸ்
தற்போது மாட்டுத் தீவன ஊழல் வழக்கை பயன்படுத்தி லாலுவுக்கு காங்கிரஸ் தக்க பாடம் புகட்டிவிட்டதாகவே கூறப்படுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் தொடர்ந்தும் காங்கிரஸை ஆதரித்து வந்தாலும் வழக்கு மூலம் இப்போது பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது அக்கட்சி.
லாலுவுக்காக அவசர சட்டம்
முலாயம்சிங் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிட்டது போல தாம் அரசை ஆதரிப்பதால் தம் மீதான வழக்கில் காங்கிரஸ் சாதகமாக என்று நினைத்தே வந்தார் லாலு. ஆனால் அது நடைபெறவில்லை. குறைந்தபட்சம் தமக்கு தண்டனை கிடைத்தால் எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசுடன் பேசிப் பார்த்தார் லாலு. இதனடிப்படையிலேயே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு.
ராகுல் முட்டுக்கட்டை
ஆனால் 3 சீட்டு ஒதுக்கி அவமானப்படுத்திய லாலுவின் அரசியல் எதிர்காலமே அஸ்தமனமாகட்டும் என்பதாலேயே ராகுல் காந்தி இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிழித்து குப்பையில் போடச் சொன்னார். ராகுலின் கருத்துக்கு லாலு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
இந்நிலையில் இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து ராகுலின் 'புண்ணியத்தால்' லாலு சிறைக்குப் போய்விட்டார். இருப்பினும் லாலுவை காங்கிரஸ் பழிதீர்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு சிறைக்கு அனுப்பியது வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். இது பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.