சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர்- நேரு மீதும் பாய்ச்சல்- காங். பத்திரிகை கட்டுரையால் பரபரப்பு!!
மும்பை: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர்; காஷ்மீர் விவகாரத்தில் ஜஹர்லால் நேரு தவறு செய்தார் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஒன்றே விமர்சனங்களை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் தர்ஷன் என்ற பெயரில் மும்பையில் இருந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஒன்று வெளிவருகிறது. இந்த பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர் மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம்.
காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாளையொட்டி இந்த பத்திரிகையின் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியாவின் தந்தை, இத்தாலி பாசிஸ்ட் ராணுவத்தில் வீரராகப் பணியாற்றியவர் என சாடி ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அதே போல் ஜவஹர்லால் நேரு, சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை புறக்கணித்தார்; இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தது; இருவரும் அவ்வப்போது ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தனர்;
படேலின் கருத்துகளை நேரு கேட்டிருந்தால் காஷ்மீர், சீனா, திபெத், நேபாளம் பிரச்சனைகள் இன்னும் உயிரோடு இருந்திருக்காது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு நேரு கொண்டு போனதை கடுமையாக எதிர்த்தவர் படேல். நேபாளம் தொடர்பாகவும் படேலின் கருத்துகளை நிராகரித்தவர் நேரு என்று காரசாரமாக எழுதப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் ஆசிரியர் சஞ்சய் நிருபம் கூறுகையில், இத்தகைய விமர்சனங்களுடன் வந்திருக்கும் கட்டுரையை என்னால் ஏற்க முடியாது. இதை யார் எழுதியது என்பது தெரியவில்லை. இதை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களோ, என்னது காங்கிரஸ் தர்ஷன்னு ஒரு பத்திரிகையா? அது அதிகாரப்பூர்வ பத்திரிகைன்னு யாருங்க சொன்னது? நாங்களே இதுவரை அதை பற்றி கேள்விபட்டது இல்லையே? என்கின்றனர்.