மின்னணு வாக்குப்பெட்டிகள் வேண்டாம், வாக்குச் சீட்டுக்கே திரும்புங்க... காங். மாநாட்டில் தீர்மானம்!
தேர்தல் ஆணையம் பழைய வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி : தேர்தல்கள் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடக்கிறது என்று மக்கள் நம்பும் விதமாக தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக தேர்தலில் பழைய முறையில் வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவின் போது குளறுபடிகள் நடப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. எனவே தேர்தல் நேர்மையாக நடக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக பழைய முறையில் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் ஜனநாயக ரீதியில் தான் நடக்கிறது என்ற உத்தரவாதத்தை அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பழைய முறையையே கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகங்கள் உள்ளன. மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கிற்கும் தேர்தலில் வெளிவரும் முடிவுகளுக்கும் முரண்பாடு இருக்கின்றன என்று காங்கிரஸ் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
பாஜக சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்லி வருகிறது. இது நடைமுறைக்கு ஒத்துவராதது என்பதோடு அரசியல் சாசனத்திற்கு இணக்கமற்றது. நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்த நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதையும் காங்கிரஸ் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.