இணைப்புக்கு முரண்டு பிடிக்கும் டி.ஆர்.எஸ்... மிரட்டலுக்கு புது வியூகம் வகுக்கும் காங்கிரஸ்!
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் உருவாகிவிட்ட நிலையில் இணைவதாக கொடுத்த உறுதிமொழியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி( டி.ஆர்.எஸ்) நிறைவேற்றாததால் அக்கட்சியை மிரட்ட புதுவியூகம் வகுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினால் தமது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியையே காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிடுவதாக கூறியவர் சந்திரசேகர்ராவ். தற்போது தெலுங்கானா உருவாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரையும் சந்திரசேகர்ராவ் நேரில் சந்தித்து பேசினார். இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸுடன் இணைந்துவிடும் என்று பேச்சுகள் எழுந்தன.
ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய்சிங் நேற்று கூட இரு கட்சிகளும் இணைவது என்பது முடிவான ஒன்று. ஆனால் எப்படி தொகுதிகளை பகிர்ந்து கொள்வது என்பதுதான் முடிவாகவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி எதிர்ப்பு தெரிவித்தது.
அப்படி ஒன்றும் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாக சொல்லவில்லையே என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர். சந்திரசேகர்ராவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுடன் இணைந்துவிடலாம் என்று நினைத்தாலும் அவரது கட்சியின் 90% அதற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றனர்.
இதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் இப்போது சந்திரசேகர் ராவ் கட்சியை மிரட்ட புதுவியூகம் வகுத்துள்ளது. தெலுங்கானா விவகாரத்தில் சந்திரசேகர் ராவ் கட்சியைவிட மிக வலுவாக போராடியது பேராசிரியர் கோதண்ட ராம் தலைமையிலான தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு. கோதண்ட ராம், உஸ்மானியா பல்கலைக் கழக பேராசிரியராக இருக்கிறார்.
இதில் மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய 20 பேர்தான் முக்கிய உறுப்பினர்கள். தற்போது இந்த குழுவை தமது பக்கம் வளைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவா நிர்வாகிகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய்சிங்கை தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு சந்தித்து பேசக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதுவரை அரசியல் வடிவம் பெறாமல் இருந்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவை அரசியல் அமைப்பாக்கி அதன் மூலம் பெருமளவிலான வாக்குகளைக் கவருவதான் காங்கிரஸின் திட்டம். காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய வியூகத்தால் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.