ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு... பதவி இழக்கிறார்?

ரஷீத் மசூத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.ரஷீத் மசூதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எம்.பி. பதவியை இழக்கப்போகிற முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத்தாக இருப்பார்.
மத்தியில் வி.பி. சிங் ஆட்சிக்காலத்தில் (1990-1991) மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரஷீத் மசூது. தற்போது இவர் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.
இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், திரிபுரா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி எதுவும் கிடையாது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது.
திரிபுரா அரசு கூட்டு பொது நுழைவுத்தேர்வு என்ற ஒன்றை நடத்தி, தகுதி வாய்ந்த மருத்துவ மாணவர்களை தேர்வு செய்து வந்தது.
இந்த நிலையில், 1991-ம் ஆண்டு தகுதியற்ற மாணவர்களுக்கு மோசடியில் ஈடுபட்டு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் இடங்களைப் பெற்றுத்தந்து ஊழல் புரிந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ரஷீத் மசூத் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின்னர் ரஷீது மசூது, திரிபுரா உறைவிட கமிஷனராக இருந்த குர்தியால் சிங், முதலமைச்சரின் செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அமல்குமார்ராய், முதலமைச்சர் சுதிர் ரஞ்சன் மஜூம்தார், மாநில சுகாதாரத்துறை மந்திரி பதவி வகித்த காசிராம் ரியாங்க் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
வழக்கு விசாரணை காலத்தில் முதலமைச்சராக இருந்த சுதிர் ரஞ்சன் மஜூம்தார், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காசிராம் ரியாங்க் ஆகியோர் இறந்து விட்டனர். எனவே அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
ரஷீது மசூத் பெயர் 3 வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தது. டெல்லி சி.பி.ஐ. தனிநீதிமன்றம், இந்த ஊழல் தொடர்பாக 12 வழக்குகளை விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் ரஷீத் மசூத் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி ஜே.பி.எஸ்.மாலிக், அவர்கள் குற்றவாளிகள் என வியாழன்று தீர்ப்பு அளித்தார்.
அவருக்கு விதிக்கவுள்ள தண்டனை பற்றிய அறிவிப்பு வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி ஜே.பி.எஸ்.மாலிக் கூறினார்.
இதனிடையே, குற்ற வழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால், தண்டிக்கப்பட்ட நாளிலேயே எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி ரஷீத் மசூதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எம்.பி. பதவியை இழக்கப்போகிற முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத்தாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications