பெருமிதப்பட வைக்கும் மனிதாபிமான குஜராத் மாடல்... வயிற்று பசி தீர்க்கும் விதம் விதமான "Roti Banks"
சூரத்/ ராஜ்கோட்: கொரோனா லாக்டவுன் காலம் நமக்கு எத்தனையோ துயரம் தோய்ந்த பக்கங்களை காட்டியிருந்தாலும் ஈர நெஞ்சுடன் கூடிய மனிதாபிமான முகங்களை ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் மனிதம் மீதான நம்பிக்கை ஒருபோதும் குறையாமல் சுடர் விட்டு பிரகாசிக்கிறது.
கொரோனா லாக்டவுன் என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு மிரட்சியான இருட்டு நிறைந்த வாழ்க்கை. அதுவும் இன்றைக்கு உழைத்தால்தான் இன்றைய உணவு என்கிற அன்றாடங் காய்ச்சிகளுக்கு நினைக்கவே நெஞ்சை நடுங்க செய்யும் பகல் இரவுகள்.
கையில் கிடைத்ததை வைத்து ஒரு தொழிலை செய்து பிழைத்து கொண்டிருந்தவர்கள் விழிபிதுங்கி நின்றார்கள். இனி என்னவாகுமோ எதிர்காலம்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அவர்களது பகலும் இரவும் கடந்தது. இப்படி துயரங்கள் சூழ் உலகில் உணவு தேவையை யார் பூர்த்தி செய்துவிட முடியும்? அத்தனை பேருக்குமே அரசால் அத்தனையையும் செய்துவிட இயலாது என்பதை அனைவருமே அறிவர்.
கர்நாடகாவின் திடீர் முடிவால் குழப்பம்.. திருப்பியனுப்பப்படும் தமிழக வாகனங்கள்.. குமுறும் மக்கள்
குஜராத் ரொட்டி வங்கிகள்
ஆகையால் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என சாத்தியமானவற்றை ஒவ்வொருவரும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய மகத்தான மனித நேய பணிகளுக்கு மனம் மட்டும் இருந்தால் போதும். நிச்சயம் செய்துவிட முடியும் என்பதற்கான முன்னுதாரணங்களில் குஜராத்தின் ரொட்டி வங்கிகளுக்கு மிக முக்கியம் இடம் உண்டு. ஆம் லாக்டவுன் காலத்தில் ஏழைகளின் வயிற்று பசி தீர்த்தன இந்த எளிய முறையிலான ரொட்டி வங்கிகள்.
சூரத் ரொட்டி வங்கி
குஜராத்தில் லாக்டவுன் காலத்தில் கவனத்தை ஈர்த்தவை ரொட்டி வங்கிகள்- Roti Banks. நீங்கள் வசிக்கும் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் உங்கள் வீட்டுக்கு ரொட்டி தயாரிக்கும் போது அதிகபட்சம் 5 ரொட்டிகளை கூடுதலாக தயார் செய்யுங்கள் அது போதும். இப்படி வீட்டுக்கு 5 ரொட்டி என்று சேகரித்து அப்பகுதியில் இல்லாத ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். இது சூரத்தின் ரொட்டி வங்கி முகம்.
ராஜ்கோட் ரொட்டி வங்கி
ராஜ்கோட்டில் விதம் விதமாக ரொட்டி வங்கிகள் வலம் வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் ஒரு இடத்தில் முகாம் இடுகிறார்கள். நீங்கள் வீடுகளில் எத்தனை ரொட்டிகளை தயார் செய்ய முடியுமோ கொண்டு வந்து தரலாம். அதனை பெற்றுக் கொண்டு பசித்த வயிறுகளிடம் கொடுத்து பால் வார்க்கிறார்கள். இதேபோல் நடமாடும் ரொட்டி வங்கிகள்.
நடமாடும் ரொட்டி வங்கிகள்
நமது ஊர்களில் நடமாடும் காய்கறி கடைகளை பார்த்திருப்போம்.. குஜராத்தில் நடமாடும் ரொட்டி வங்கிகள் வலம் வருகின்றன. வீடுகள் தோறும் சென்று ரொட்டிகளை நேரடியாக வண்டிகளில் சேகரிக்கிறார்கள். அதை அப்படியே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்குப் போகிறார்கள். இப்படியான ரொட்டி வங்கிகள்.. ஏதோ பசிதீர்த்த காரியத்தை மட்டும் செய்துவிடவில்லை.. குஜராத் மாநிலத்தின் எத்தனையோ கறைபடிந்த முகங்களை தூய்மைப்படுத்தியிருக்கிறது என்பதும் நிதர்சனம்.