பசு நாட்டின் புனிதமான செல்வம்.. பலியிட யாருக்கும் உரிமையில்லை- ஆந்திரா ஹைகோர்ட்
பசு இந்தியாவின் புனிதமான சொத்து. அதை பலியிட யாருக்கும் அடிப்படை உரிமை கிடையாது என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹைதராபாத்: பசுக்கள் இந்திய நாட்டின் புனிதமான சொத்து. மதத்தின் பெயரால் அதை பலியிட யாருக்கும் உரிமையில்லை என்று ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி. சிவசங்கராவ் கூறிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக பசுக்களை கொல்வதற்கு தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிவசங்கரராவ் தனது தீர்ப்பில், பசு புனிதமானது, நாட்டின் தேசிய சொத்து. பசுவை கோமாதா என்று மக்கள் அழைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அதனை தெய்வமாக போற்றி வணங்குகின்றனர்.
பசுக்களை கொலை செய்யக்கூடாது என்று புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனவேதான் அதை வதைப்பதோ, இறைச்சிக்காக கொல்வதோ கூடாது என்றார்.
ஆந்திராவில் 63 பசுக்கள், 2 எருதுகளை போலீசார் கைப்பற்றி கோசாலைக்கு கொண்டு சென்றனர். அவற்றை திரும்ப பெற்றுத்தரக்கோரி உரிமையாளர் ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
1977 ஆம் ஆண்டின் ஆட்டுக்குட்டி மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டம் 2 சட்டத்தின் கீழ் விலங்குகளின் சட்டத்திற்காக கொடுமைப்படுத்துதல் மற்றும் பசு மாடுகளை தடை செய்வதன் கீழ் ஒரு வழக்கு உரிமையாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றம் பசுவை இறைச்சி கூடத்திற்கு கொண்டு சென்றவருக்கு தண்டனை அளிக்கவே, அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இதனையடுத்து வேதங்கள், உபநிஷதங்களை மேற்கோள் காட்டிய நீதிபதி, பைபிள் மற்றும் இஸ்லாம் புனித நூல்களில் எல்லாம் விலங்கு வதைக்கு எதிராக உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆரோக்கியமான பசுவை மத பண்டிகை என்ற பெயரில் கொலை செய்வது அடிப்படை உரிமை கிடையாது என்று கூறிய நீதிபதி, பசுக்களை கோசாலையில் இருந்து மீட்டு தரக்கோரியவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே ராஜஸ்தான் ஹைகோர்ட் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா என்பவர் தனது பதவி ஓய்வு நாளன்று இதுதொடர்பான ஒரு வழக்கில் பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு நீதிபதி பசுவை புனிதமானது என்று கூறி பரபரப்பைக் கூட்டியுள்ளார்.