உபியில் பசுவதையில் கைதான நபருக்கு ஜாமின்! ஆனால் ஒரு கண்டிஷன்! நீதிபதியின் ‛அடடே’ உத்தரவு
அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு அலகாபாத் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஒரு மாதம் கோசாலையில் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தேசிய விலங்காக பசுவுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நீதிபதி தான் இந்த நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி தற்போது உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதி வணங்கி வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பசுவதையில் கைது
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களை வதைக்கும் நபர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பரேலி மாவட்டத்தை சேர்ந்த சலீம் என்ற காலியா மீது போஜிபுரா போலீசில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பசுவை திருடியது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 379 (திருட்டு) மற்றும் உத்தர பிரதேச மாநில பசுவதை தட்டுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜாமின் வழக்கு
இந்த வழக்கில் இருந்து ஜாமின்கோரி சலீம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி சேகர்குமார் யாதவ் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞர், ‛‛மனுதாரர் அப்பாவி. இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவர் தவறு செய்யவில்லை. வழக்கு ஒன்றில் கைதான நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிபந்தனையுடன் ஜாமீன்
இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமின் வழங்கும் பட்சத்தில் அவர் பரேலி மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட கோசாலையின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வததோடு, ஒருமாதம் பணியாற்றவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி மேற்கூறிய நிபந்தனைகளுடன் பின்பற்ற உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். மேலும் இரண்டு உத்தரவாதங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கடந்த 2021 செப்டம்பரில் பசுவை வதைத்ததாக ஜாவித் என்பவருக்கு நீதிபதி சேகர் குமார் யாதவ் ஜாமின் வழங்க மறுத்தார். அப்போது அவர், ‛‛பசுவுக்கு தேசிய விலங்கு எனும் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பசு இந்திய கலாசாரத்தின் ஒருபகுதியாக உள்ளது. பசுவின் இறைச்சியை உண்பதை அடிப்படை உரிமையாக கருத முடியாது. மேலும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, ஆக்சிஜனையே வெளியிடும் ஒரே விலங்கு பசு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்'' என்பன உள்ளிட்ட சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications