பெண்களுக்கு எதிரான “சைபர்” குற்றங்கள்: கர்நாடகாவில்தான் அதிகமாம் – அதிர்ச்சித் தகவல்
டெல்லி: உலகில் பெண்களுக்கெதிரான சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகமே உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இதனால் பெண்களுக்கான பாதுகாப்பு தினம், தினம் குறைந்து கொண்டே வருகின்றது.
திருடும் இணையம்:
தற்போது இணையம் வழியாக பல்வேறு குற்றங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பண பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது, பாஸ்வேர்ட் மற்றும் கணக்கு விவரங்களை திருடுவது அதிகரித்து வருகின்றது.
அதிகரிக்கும் குற்றங்கள்:
பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுதல், மிரட்டுதல், தடை செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் விற்பனை செய்வது, வெப்சைட் ஹேக்கிங், இமெயில் மிரட்டல், பேஸ்புக் மூலம் ஏற்படும் குற்றங்கள் போன்றவை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்தியாவில் 50 சதவீதம்:
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகளினால் இந்தியாவில் 51 சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் அதிகம்:
குறிப்பாக, ஐ.டி கம்பெனிகள் அதிகம் உள்ள ஆந்திரா , கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் நிகழ்வதாக தெரியவந்துள்ளது.
மாநிலத்திற்கு மாநிலம் இந்தக் கொடுமை:
மகாராஷ்டிராவில் சென்ற ஆண்டை விட தற்போது 681 சைபர் கிரைம் வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. ஆந்திராவில் 635 வழக்குகளும், கர்நாடகாவில் 513 வழக்குகளும் அதிகமாக பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 372 வழக்குகள் சென்ற ஆண்டைவிட அதிகமாக பதிவாகியுள்ளது.
விதிவிலக்கான மாநிலங்கள்:
குஜராத், ஒடிசா மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் 60 வழக்குகளே பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு பரவாயில்லை:
தமிழ்நாட்டில் 54 வழக்குகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.