ஃபனி புயல் இன்றிரவு மேற்கு வங்கத்தை தாக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கொல்கத்தா: இன்று இரவு 8.30 மணிக்கு ஃபனி புயல் மேற்கு வங்கத்தை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் 240கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து கரையை கடந்தது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபனி புயல் பூரி அருகே கரையை கடந்தது. காலை 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் காலை 11 மணி அளவில் கரையை கடந்தது. ஃபனி புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 245 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. ஒடிசாவில் கரையை கடந்த ஃபானி புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஒடிசாவை தாக்கிய ஃபனி.. பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை கட்டம் கட்டுவது ஏன்?
இதனையடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது அடுத்த 48 மணிநேரத்திற்கான அனைத்து பிரச்சார பயணங்களை ரத்து செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அசுர புயல் வீசியதை தொடர்ந்து, ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்துள்ளன.