Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
அகமதாபாத்: டவ் தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
அரபிக் கடலில் லட்சத்தீவுகள் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது.
டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக் கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கன மழை பெய்தது. இந்த புயலின் கோரத் தாண்டவத்தால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், டாமன் டையு உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று டவ்-தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கிறார். உனா, டியு, ஜஃபராபாத், மகுவா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விமானம் மூலம் ஆய்வு செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.
குஜராத்தின் சௌராஷ்டிரா அருகே கடந்த பிறகு டவ்-தே அதிதீவிர புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுவிழந்தது. இந்நிலையில், அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நள்ளிரவில் ராஜஸ்தானுக்குள் நுழையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..!
இதன் காரணமாக ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டவ் தே புயலால் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி 273 பேரை கொண்டிருந்த கப்பல் ஒன்று மும்பை அருகே கவிழ்ந்தது. இதில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 177 பேரை இந்தியக் கடற்படை மீட்டுள்ளது. காணாமல் போன 96 பேரைக் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.