காஷ்மீரில் மேகவெடிப்பு.. அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.. யாத்திரை நிறுத்தம்
ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரில் மேக வெடிப்பு போன்ற அதி கனமழை பெய்ததால் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது அமர்நாத் குகை. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்துக்கு வந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை நிலவியதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து வானிலை சீரானவுடன் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை குகை இருக்கும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே கனமழை பெய்தது.
மேகவெடிப்பு மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் இரவு முதல் நடைபெற்று வருகிறது. மோப்பநாய் உதவியை கொண்டு தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications