விஜய் மல்லையா போன்று வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த மற்றொரு தொழில் அதிபர் எஸ்கேப்
டெல்லி: தொழில் அதிபர் விஜய் மல்லையா போன்று வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் ஜதின் மேத்தா செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் தீவு நாட்டின் குடிமகனாகிவிட்டார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டும் அவர் அதை கண்டுகொள்ளாமல் லண்டனிலேயே உள்ளார்.
இந்நிலையில் மல்லையா போன்று வங்கிகளில் ரூ. 6 ஆயிரத்து 800 கோடி கடன் வாங்கிய துபாயை மையமாகக் கொண்டு தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்து வரும் வின்சம் டைமண்ட்ஸ் அன்ட் ஜுவல்லரி லிமிடெட்டின் உரிமையாளர் ஜதின் மேத்தா தனது இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறிவிட்டார். தன்னிடம் தங்கம், வைரம் வாங்கியவர்கள் பணம் தராமல் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அட்லான்டிக் பெருங்கடல் மற்றும் கரீபிய கடல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தீவு நாடான செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸில் தனக்கும், தனது மனைவிக்கும் குடியுரிமை பெற்றுவிட்டார்.
தற்போது துபாயில் வசித்து வரும் மேத்தாவின் ரூ. 172 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.