'நமஸ்தே'ன்னா என்ன சொல்லுங்க பார்க்கலாம்... சீன வீரர்களிடம் கேட்ட நிர்மலா சீதாராமன்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்கிம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன வீரர்களுக்கு வணக்கம் சொல்ல கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்கிம், அருணாச்சல பிரதேச சுற்றுப் பயணத்தின் போது எல்லையில் சீன வீரர்களுக்கு பரஸ்பரம் வணக்கம் சொல்லிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
அண்மையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனைகள் நடத்தினார்.
இதே போன்று சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
நாது லா பகுதிச் சென்ற நிர்மலா சீதாராமன்
இதன் தொடர்ச்சியாக வார இறுதியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் எல்லைப் பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். சிக்கிம் மாநிலத்தின் நாது லா பகுதிச் சென்ற நிர்மலா சீதாராமன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சீன வீரர்களுக்கு நமஸ்தே
டோக்லாமின் நாது லா பகுதி சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் எல்லையோரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சீனப் படை வீரர்களுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்தே என்ற சொன்னார்.
அளவளாவிய அமைச்சர்
நமஸ்தே என்றால் என்னவென்று தெரியுமா என்று அவர்களிடம் அமைச்சர் கேட்க, அதற்கு சீன ராணுவ வீரர் (மொழிபெயர்ப்பாளர்) உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி என்று தானே அர்த்தம் என கேட்கிறார். உடன் அவரை நமஸ்தே என்று சொல்லுமாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
|
வைரலாகும் வீடியோ
நீங்கள் நமஸ்தேவிற்கு சீன மொழியில் என்ன சொல்வீர்கள் என்று கேட்க அதற்கு சீன வீரர் 'நீ ஹோவா' என்று சொல்ல, அமைச்சர் ஒவ்வொரு சீனப் படைவீரர்களையும் சந்தித்து நமஸ்தே என்று சொல்ல பதிலுக்கு அவர்கள் நீ ஹோவா என்று சொல்கின்றனர். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பதற்றம் தணிந்த நிலையில் நமஸ்தே
டோக்லாம் பகுதியில் சீன சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதால், இந்தியா சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவியது. 70 நாட்கள் நீடித்த பதற்றமான சூழலுக்குப் பிறகு இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறின. இந்நிலையில் எல்லையில் சீன வீரர்களுக்கு நமஸ்தே கூறி நட்புணர்வை ஏற்படுத்தும் அமைச்சரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.