டெல்லியில் பயங்கரம்: ஏ.டி.எம் காவலாளியை கொன்று ரூ.1.5 கோடி பணம் கொள்ளை
டெல்லி: டெல்லியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். காவலாளியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, பணம் ஏற்றி வந்த வங்கி வாகனத்தை வழிமறித்த மர்மநபர்கள் ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
வடக்கு டெல்லியில் கமலா நகர் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகம் அருகே வங்கி ஏ.டி.எம் உள்ளது. அதில் பணத்தை நிரப்புவதற்காக தனியார் வங்கி பணியாளர்கள், இன்று காலை 11 மணி அளவில் ஒரு வேனில் வந்தனர்.
அந்த வேன் ஏ.டி.எம். முன்னால் நிறுத்தப்பட்டது. அப்போது வேனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள், ஏ.டி.எம்.மிற்கு வெளியே காவலுக்கு நின்ற பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டனர்.
நடந்த சம்பவத்தை அறியும் முன்பாக ரூ. 1.5 கோடி பணம் அடங்கிய பெட்டியை வைத்திருந்த நபரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அதனை பிடுங்கிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
துப்பாக்கியால் சுடப்பட்ட பாதுகாவலரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு,கொள்ளைச் சம்பவம் நடந்த போது அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு நபர் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார். அதில் பதிவாகி உள்ள காட்சிகளையும், ஏ..டி.எம்.-மிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருவதாகவும், கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.