தினகரன் புரோக்கர் சுகேஷின் போலீஸ் காவல் நீட்டிப்பு... டெல்லி நீதிமன்றம் அனுமதி
டெல்லி : இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரனின் இடைத்தரகர் சுகேஷ் சந்தரின் போலீஸ் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இடைத்தரகர் சுகேஷ் சந்தரை தினகரன் அணுகியதாகவும். மொத்தம் 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முதல்கட்டமாக 1 கோடியே 30 லட்சம் பணம் அளித்ததாக டெல்லியில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்தர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கடந்த 3 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராக உள்ளார். டிடிவி தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பரிடம் இன்று காலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுகேஷ் சந்தரின் விசாரணை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க டெல்லி போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும் சுகேஷ் சந்தர் மற்றும் டிடிவி தினகரன் உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து சுகேஷின் போலீஸ் காவலை மேலும் 3 நாட்கள் அதாவது ஏப்ரல் 28ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இடைத்தரகர் பைசல் மற்றும் தினகரனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தருவதில் இடம் பெற்றிருந்த வழக்கறிஞர் கோபியிடமும் போலீசார் நாளை விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications