சர்ச்சைக்குரிய 4 வருட பட்டப்படிப்பு... வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!
டெல்லி: சர்ச்சைக்குள்ளான நான்கு வருட பட்டப்படிப்புத் திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 4 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர்களிடையே எதிர்ப்பு வலுத்தது. அதனால், இளநிலை பட்டப்படிப்பு காலத்தை 3 ஆண்டுகளாகவே தொடர பல்கலைக்கழகம் மற்றும் அதன் 64 உறுப்பு கல்லூரிகளுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த உத்தரவு குறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முடிவு எடுப்பதில் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் 54 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 2.78 லட்சம் மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
பட்டப்படிப்பின் காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இவ்விவகாரத்தில் தலையிட பல்கலைக்கழக பேராசிரியர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, மூன்றாண்டு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடரும் படி, டெல்லி பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி மீண்டும் கடிதம் அனுப்பியது. இதற்கு டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், நான்காண்டு பட்டப்படிப்புகளை மூன்றாண்டு (ஆனர்ஸ்) படிப்புகளாக மாற்றிக் கொள்ளப்படும். நான்கு ஆண்டு பி.டெக். படிப்புகள் மட்டும் அப்படியே தொடரட்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று நான்கு ஆண்டு பட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகம் திரும்பப்பெறுவதாக அதன் துணை வேந்தர் தினேஷ் சிங் தெரிவித்துள்ளார். மேலும், 2012 - 13 கல்வி ஆண்டில் எந்தெந்த பாடப்பிரிவுகள் இளங்கலை படிப்புக்கு பட்டியலிடப் பட்டிருந்தனவோ, அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.