ரிசர்வ் வங்கி ஆளுநர் கார் முற்றுகை.. கருப்புக்கொடி காட்டி காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு
கொல்கத்தாவில் ரிசர்வ் பேங்க் ஆளுநர் காரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் காரை மறித்து காங்கிரஸ் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதாக கூறி புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய் நோட்டகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகளை டிசம்பர் 30 வரை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு தீர்ந்தபாடு இல்லை. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாமலே உள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் நேற்று கொல்கத்தா விமான நிலையத்திற்கு காரில் வந்தார். அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது உர்ஜித் பட்டேலுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். கையில் வைத்திருந்த கருப்புக்கொடியை காட்டியும் தங்களது எதிர்ப்பைத் வெளிப்படுத்தினர்.
இதையடுத்து உர்ஜித் பட்டேலை போலீசார் பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அழைத்துத் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.