ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வதால் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.
கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அரசு செல்லாது என அறிவித்தபோது ஒன்றும் பேச முடியாமல் தவித்த எதிர்க்கட்சிகள், இப்போது மக்கள் ரூபாய் நோட்டு கிடைக்காமல் அவதிப்படுவதால், வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல உணர்கின்றன. எனவே இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி தர அவை திட்டமிட்டுள்ளன.
நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள எதிர்கட்சிகள், நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரியா ஜனதா தளம், இடதுசாரிகள் போன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நாடாளுமன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.