ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த குழந்தையின் உடலை தோளில் சுமந்து சைக்கிளில் எடுத்துச் சென்ற தாய்மாமா!
கவுஷாம்பி: உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உயிரிழந்த 7 மாத குழந்தையின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கவுஷாம்பி மாவட்ட அரசு மருத்துவமனையில் பூனம் என்ற 7 மாதக்குழந்தை வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இக்குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

இக்குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவரது தாய்மாமா பிரிஜ் மோகன், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் டீசலுக்கான தொகையை முதலில் செலுத்துமாறு கேட்டதால், அதைக் கொடுக்க வசதியின்றி, பூனத்தின் உடலை மோகன் தனது தோளில் சுமந்தபடி சுமார் 10 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள சொந்த கிராமத்துக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
இதனிடையே இந்த அதிர்ச்சிகர சம்பவம் மாவட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதால், பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். உ.பி.யில் இதற்கு முன் கடந்த மே 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் இறந்த பெண் ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டது.
இதையடுத்து அப் பெண்ணின் கணவர் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்றார். இதனால் நிலைமை விபரீதமாகும் என்பதை உணர்ந்த டாக்டர்கள், பின்னர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவினர். உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி தொடர் கதையாக நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications