விடாது கருப்பு... வங்கிக் கணக்குகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள்... பான் எண் கட்டாயம்!
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை: வங்கிக் கணக்குகளை இயக்குவதற்கு பான் எண்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே ஏராளமான அறிவிப்புகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்டு வருகிறது. இதனால் பணத்தட்டுப்பாடும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந் நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரிசர்வ் வங்கி இன்று பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 8-ந் தேதிக்கு பின்னர் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்தால் அந்த பணத்தை எடுக்க பான் எண் கட்டாயம் தர வேண்டும். இல்லை எனில் படிவம் 60 தர வேண்டும். அப்படி இரண்டையும் தரவில்லை எனில் பணத்தை எடுக்க முடியாது.
அதேபோல் ரூ 5லட்சத்துக்கும் மேல் வங்கிக் கணக்கில் வைத்திருந்தால் பான் எண் கட்டாயம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.