பைத்தியம் என அழைக்கப்பட்ட காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர்.. அவையில் நடந்த பரபரப்பு
தன்னை பைத்தியம் என ராஜ்யசபா துணை சபாநாயகர் அழைத்தது தனக்கு மன வருத்தத்தை கொடுத்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
டெல்லி: ராஜ்ய சபாவில் காங்கிரஸ் உறுப்பினர் கேவிபி ராமச்சந்திரா ராவ் 'பைத்தியம்' என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். ராஜ்யசபா துணை சபாநாயகர் பிஜே குரியன் அவரை இப்படி அழைத்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பலரும் பார்க்கும் வகையில் ஆங்கிலத்தில் 'மேட்' என்று பேசியுள்ளார்.
தற்போது இந்த வாசகம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குரல்
ராஜ்ய சபா கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேவிபி ராமச்சந்திரா ராவ் ஆந்திர மாநில பிரச்சனைகள் குறித்து பேசிய போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அப்போது அவர் தன் கையில் அறிவிப்பு பலகையை வைத்துக் கொண்டு துணை சபாநாயகர் பிஜே குரியன் இருக்கை அருகில் நின்று இருக்கிறார். கோஷம் எழுப்பி உள்ளார்.
பிரச்சனை
இது அனைவருக்கும் உறுத்தலாக இருந்துள்ளது. உடனே துணை சபாநாயகர் பிஜே குரியன் கேவிபி ராமச்சந்திரா ராவை அவரது இருக்கையில் அமர சொல்லியுள்ளார். ஆனால் அவர் அமரவில்லை என்றதும், ஏன் பைத்தியம் மாதிரி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.
அவை குறிப்பில் நீக்கம்
இந்த வாசகம் அங்கு பிரச்சனையை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தவறை உணர்ந்த பிஜே குரியன் அவை குறிப்பில் இருந்த வாசகத்தை நீக்கினார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதி ஆனார்கள்.
தூக்கமில்லை
தற்போது இதுகுறித்து கேவிபி ராமச்சந்திரா ராவ் பேசியுள்ளார். அதில் ''என்னை பைத்தியம் என்பதா?. என் வாழ்க்கையில் இதைவிட மோசமான சம்பவம் நடந்தது இல்லை. எனக்கு அதைக்கேட்ட பின் இரவில் தூக்கம் கூட வரவில்லை. ஆந்திராவிற்காக பேசிய நான் பைத்தியம் என்றால் அப்படியே இருக்கட்டும்'' என்றுள்ளார்.