காவிரி வழக்கால் பீதி.. போலீசார் வேண்டுகோளுக்கு நடுவேயும் வீட்டுக்குள் முடங்கிய பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வருவதால் கலவரம் வெடிக்க கூடும் என்ற அச்சத்தில் பெங்களூர்வாசிகள் உள்ளனர். அச்சப்பட வேண்டாம் என ஒருபக்கம், நகர காவல்துறை தொடர்ந்து வேண்டுகோள்விடுத்தபடி உள்ளது.
கடந்த 12ம் தேதி காவிரி பங்கீடு தொடர்பான கர்நாடக அரசின் சீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அன்று பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் அதே வழக்கின் தொடர்ச்சி இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலரும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. ஆபீஸ் செல்வோரும் அதை தவிர்த்தனர். ஐடி நிறுவன பணியாளர்கள் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை பார்க்க அனுமதி பெற்றனர்.
இதனால் வழக்கத்தைவிட இன்று பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் சற்றே, குறைந்து காணப்பட்டது. அதேநேரம், மக்கள் அச்சப்பட வேண்டாம், பணிக்கு செல்லலாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்து வருகிறது.
மெஜஸ்டிக் பஸ் நிலையம், சாந்திநகர் பஸ் நிலையம், தமிழர்கள் அதிகம் வாழும், ராஜாஜிநகர், சிவாஜிநகர், கே.பி.அக்ரஹாரம், பானசவாடி, மாகடி ரோடு, ஸ்ரீராமபுரம், சேஷாஸ்திரிபுரம் பகுதிகளில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications