பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள்..மீண்டும் சர்ச்சையில் சிக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்
பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்செந்தூர்: பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துகுடி மாவட்டத்தில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். தற்போது கிறஸ்துமஸ்ஸையொட்டி விடுமுறை என்பதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பெரும்பாலும் கோயில்களில் விற்கப்படும் உணவு பிரசாதங்களை பக்தர்கள் வாங்கி சாப்பிடுவதுண்டு. அது போல் அங்கு புட்டு மாவு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
புட்டுமாவு
மிகவும் சுவையுடன் இருக்கும் இந்த புட்டு மாவு சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படுகிறது. இந்த மாவு அண்மைகாலமாக கெட்டு போனதாகவே விற்கப்படுகிறது என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த மாவை சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் மாவிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.
கெட்டு போகாது
பொதுவாக உணவு பொருட்களில் தயாரிக்கப்படும் காலமும் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற காலமும் அச்சடிக்கப்படும். அதற்குள் அந்த பொருளை சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் இந்த புட்டுமாவுகளில் 3 மாத காலத்துக்குள் சாப்பிட வேண்டும் என்ற தேதி இருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது கோயில் நிர்வாகத்தின் ஏமாற்று வேலை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
பக்தர்கள் வேதனை
கோயிலில் உள்ள பிரசாத ஸ்டால்களில் உள்ள பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலன் காக்க திருச்செந்தூர் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் பிரகார மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பேச்சியம்மாள் என்ற பெண் பலியானார். இது அங்குள்ள பிரகாரங்களை நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காததையே காட்டுகிறது.