சபரிமலையில் மகர ஜோதி... சரணகோஷத்துடன் பக்தர்கள் பரவச தரிசனம்!!
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சரணகோஷமிட்டு சாமி கும்பிட்டனர்.
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கையும், பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியையும் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளிக்கவே பக்தர்கள் எழுப்பிய சரணகோஷம் விண்ணையெட்டியது.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகடந்த டிசம்பர் 30ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சபூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 13ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது.
தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.35 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின், சன்னிதானத்துக்கு எடுத்து வரப்பட்ட திருவாபரணம் ஐயப்ப சாமிக்கு, அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது. மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மகர ஜோதியை சன்னிதானம், பாண்டிதாவாலம், புல்மேடு, சரங்கொத்தி, மரக்கூடம், அட்டத்தோடு, உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கண்டுகளித்தனர்.