நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை...: கெஜ்ரிவால் ஆவேசம்
டெல்லி: நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை என்றும் அல்லது பாகிஸ்தானுக்கு ஓடிவிடவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியில் அமரும் அளவிற்கு மக்களிடையே செல்வாக்கை பெற்றது ஆம் ஆத்மி. ஆனால் ஜன்லோக்பால் மசோதா பிரச்சினை காரணமாக ஒன்றரை மாதங்களிலேயே தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால்.
தற்போது பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு எதிராக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் கெஜ்ரிவால். மேலும், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி, டெல்லிக்கு உட்பட்ட சாந்தினி சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது :-
சொல்லுங்க மக்களே சொல்லுங்க...
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து எனது அரசு நிறைவேற்றியது போல் எந்த அரசியல் கட்சியும் குறுகிய காலத்தில் திட்டங்களை நிறைவேற்றியதில்லை.
நான் ஓடிப் போகவில்லை...
பதவியை ராஜினாமா செய்து விட்டு நான் ஓடிப்போனதாக சிலர் கூறி வருகின்றனர். யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடவில்லை. நான் பாகிஸ்தானுக்கும் சென்றுவிடவில்லை.
உயிருள்ள வரை...
நான் இங்கேதான் இருக்கிறேன். எனது இறுதிமூச்சு உள்ள வரை ஊழலை எதிர்த்து போராடுவேன்.
கடவுள் எங்க பக்கம் தான்...
மோடியிடமும், ராகுலிடமும் இன்று பணபலம் இருக்கலாம். ஆனால், எங்களுடன் கடவுள் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.