சக்கர நாற்காலி தராத ஏர் இந்தியா.. ஏர்போர்ட் முனையத்திற்கு தவழ்ந்தே சென்ற மாற்றுத்திறனாளி பெண்
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் டெல்லி விமான நிலையத்தில், சக்கர நாற்காலி வண்டி ஏற்பாடு செய்து தராததால் தவழ்ந்தே ஏர்போர்ட் முனையத்தை சென்று அடைந்ததாக கால் ஊனமுற்ற பெண் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007ம் ஆண்டுக்கு பிறகு லாபத்தையே பார்க்கவில்லை என்றாலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சார்ந்த சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை.
கடந்த மாதம், பயணிகள் அமரும் இடத்தில் எலி ஓடியதாக கூறி மும்பையிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா பயணிகள் குற்றம்சாட்டியதால் விமானம் திரும்ப தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் இருக்கும் பகுதியில் இருந்து புகை வந்ததால் அதுவும் திரும்ப தரையிறக்கப்பட்டது.
இப்போது மற்றொரு குற்றச்சாட்டில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலரும், மாற்றுத்திறனாளியுமான, அனிதா காய் (53) இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அனிதா கடந்த சனிக்கிழமை, டேராடூன் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், டெல்லி வந்துள்ளார்.
டெல்லியில் விமானம் தரையிறங்கியதும், முனையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்ல வேன் வந்துள்ளது. ஆனால், விமானத்தில் இருந்து சற்று தூரத்தில் அந்த வேன் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், சக்கர நாற்காலி தேவை என்று அனிதா, ஏர் இந்தியா ஊழியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அனிதா கோரிக்கைவிடுத்து 1 மணி நேரமாகியும், சக்கர நாற்காலி வந்தபாடில்லையாம். இதுகுறித்து மீண்டும் கேட்டதற்கு, பாதுகாப்பு காரணங்களால் நாற்காலியை கொண்டுவர முடியவில்லை என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், விமானத்தில் இருந்து இறங்கிய இடத்தில் இருந்து, முனையம் வரை தவழ்ந்தே சென்றதாகவும், பிறகு சில சக பயணிகள் அவர் முனையத்தை அடைய உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார் அனிதா.
இதனை ஏர் இந்தியா மறுத்துள்ளது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் சொகுசுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், சக்கர நாற்காலியை கொண்டுவர தாதமமாகியிருக்கலாம் எனவும், நாற்காலி கொடுக்க மறுக்கவில்லை எனவும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.