விரைவில் டெல்லி சட்டசபைத் தேர்தல்... பாஜக முதல்வர் வேட்பாளராகிறார் மீனாட்சி லேகி?
டெல்லி: லோக்சபா தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியைத் தொடர்ந்து, விரைவில் டெல்லி சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக யாரும் எதிர்பார்க்காத அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற இயலவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார்.
கட்சி ஆரம்பிக்கப் பட்ட குறுகிய காலத்தில் ஆட்சியில் அமர்ந்த ஆம் ஆத்மி மீது டெல்லி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், 49 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதா காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
ஆம் ஆத்மியின் தோல்வி...
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். போட்டியிட்ட அநேக இடங்களில் ஆம் ஆத்மி தோல்வியடைந்தது.
பாஜக வெற்றி...
இதற்கிடையே, அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது. லோக்சபா தேர்தலில் மோடி அலை மூலம் வெற்றி சாத்தியமானதாக பாஜக கூறி வருகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தல்...
காங்கிரஸ் அரசிற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதை வெளிக்காட்டும் விதமாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி டெல்லி சட்டசபைத் தேர்தலை நடத்துவது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறதாம்.
மற்ற மாநில சட்டசபைத் தேர்தல்...
எனவே, இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள அரியானா, மகாராஹ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல்களோடு சேர்த்து டெல்லி சட்டசபைத் தேர்தலையும் நடத்தலாம் என திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவின் மனக்கணக்கு...
16வது லோக்சபா தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. எனவே, சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கலாம் என பாஜக கணக்குப் போடுகிறதாம்.
வீண் விமர்சனம்...
ஒருவேளை பாஜக அதிக இடங்களைப் பிடிக்க இயலாமல் போனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாக வேண்டி வரலாம் என்பதால், டெல்லியின் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளதாம் பாஜக.
உட்கட்சிக் குழப்பம்...
கடந்த முறை டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிக்கப் பட்டார். ஆனால், காலதாமதமாக அவரது பெயர் அறிவிக்கப் பட்டதும் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என கட்சித் தலைமை கருதுகிறதாம்.
மோடி அலை...
இதனால், இம்முறை யாரும் எதிர்பார்க்காத முதல்வர் வேட்பாளரை டெல்லியில் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்கூட்டியே பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டது போல, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது.
டெல்லி முதல்வர் வேட்பாளராக...
அதன்படி, இம்முறை பாஜக முதல்வர் வேட்பாளராக மீனாட்சி லேகி பெயரை அறிவிக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாஜகவின் செய்தி தொடர்பாளரான மீனாட்சி லேகி லோக்சபா தேர்தலில் டெல்லித் தொகுதியில் போட்டியிட்டார்.
மீனாட்சியின் வெற்றி...
முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மீனாட்சி லேகி 4,53,350 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி வேட்பாளர் ஆசிஷ் கேத்தனை விட 1,62,708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கூடுதல் தகுதி...
எனவே, மீனாட்சியை மீண்டும் டெல்லி சட்டசபைத் தேர்தலில் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். சிறந்த பேச்சாளரான இவர் கட்சிக்குள் எந்த கோஷ்டியையும் சேராதவர் என்பது அவரது கூடுதல் தகுதியாகக் கூறப்படுகிறது.
கிரண்பேடிக்கு வாய்ப்பில்லை...
இதற்கிடையே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் வெளியில் இருந்து கட்சிக்குள் வரும் புதியவர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக துணியாது எனக் கூறப்படுகிறது.
வாழ்வா,சாவா தேர்தல்..
டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சோதனையானதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் டெல்லி ஆட்சியை இழந்த ஆம் ஆத்மிக்கு லோக்சபா தேர்தல் சொல்லிக் கொள்வது போல் அமையவில்லை. டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் தோல்வி கிடைத்தால், அக்கட்சி காணாமல் போவது உறுதியாகி விடும்.
காங். நிலை...
அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது பெருவாரியான மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது கடந்த லோக்சபா தேர்தலில் வெளிப்படையாகவே தெரிந்தது. பல மாநிலங்களில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. எனவே, இத்தேர்தலை பயன்படுத்தி மீண்டும் புத்துயிர் பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.