மஹாளய/பித்ரு பக்ஷத்தில் குற்றம் செய்யாதீர்... குற்றவாளிகளிடம் கைகூப்பி கேட்ட சுஷில் மோடி!
பாட்னா: பித்ரு பக்ஷம் நாட்களில் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று குற்றவாளிகளுக்கு பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டார்.
பித்ரு பக்ஷம் என்பது 16 நாட்கள் இந்துக்களால் கடைபிடிக்கப்படும் ஒரு அசுப நாட்களாகும். இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த நாட்களில் இறந்து போன அப்பா, தாத்தா, அவரது அப்பா, அம்மா, பாட்டி முதலான நமது குடும்பத்தில் நம்முடன் பல காலம் வாழ்ந்து, இறந்த பின்னால், பித்ருக்களாக வாழும் நமது முன்னோர்கள், அனைவரும் யம தர்மராஜாவால் ஏவப்பட்டு, நம்மைப் பார்த்து ஆசி வழங்க, நம் இருக்கும் பூலோகம் தேடி வரும் காலமே மஹாளய பக்ஷம் அல்லது பித்ரு பக்ஷம் எனப்படும்.
இந்த ஆண்டு பித்ரு பக்ஷம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும். இந்த நாட்களில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில் உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த பித்ரு பக்ஷ காலத்தில் அனைத்து குற்றவாளிகளும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
மற்ற நாட்களில் நீங்கள் குற்றங்களை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில் பித்ரு பக்ஷம் கழித்து குற்றவாளிகள் குற்றங்களை செய்து கொள்ளலாம் என்கிறாரா சுஷில் மோடி.
கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் கிரிமினல்களிடம் கைகூப்பி வணங்குவது அவரது அரசுக்கு ஏற்படுத்தியுள்ள அவப்பெயராகும். திருவிழாக் காலங்களில் கடத்துவது, திருடுவது , சுட்டுக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.