குடியரசு தலைவர் தேர்தல்..50 ஆயிரம் லட்டுகள், நடன கலைஞர்கள் தயார்.. கொண்டாட காத்திருக்கும் ஒடிசா!
புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன் கொண்டாடுவதற்காக, அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் எம்பி-க்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் கடந்த 18ம் தேதி மாலையே விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திரெளபதி முர்முவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் கொண்டாட்டங்களுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் மாநிலத்தின் ராய்ரங்பூர் பகுதியைச் சேர்ந்த திரெளபதி முர்முவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. திரெளபதி முர்மு வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரும் ராய்ரங்பூர் வருகை புரிந்து வருகின்றனர். தங்கள் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் இந்தியாவின் மிக உயரிய பதவியில் அமர உள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில், ஒடிசா பழங்குடிகளின் பாரம்பரிய நடனமும் இடம்பெற உள்ளது. இதற்காக ஏராளமான நடன கலைஞர்கள் ராய்ரங்பூர் வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன், அவரை வாழ்த்தி வைக்கப்படுவதற்காக பெரும் பதாகைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications