“திராவிட நகர திட்டம்” தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்.. கவனம் ஈர்த்த திராவிட நண்பர்கள் தின விழா!
அமராவதி: சர்வதேச நண்பர்கள் தினமான இன்று ஆந்திராவில் நடைபெற்ற திராவிட நண்பர்கள் தின விழாவில் 4 மொழிகளை பேசும் செயற்பாட்டாளர்கள், திராவிட உணர்வாளர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பகுதி நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என பல வகைகளில் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். அந்தந்த நண்பர்கள் வட்டங்களில் இன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நண்பர்கள் தினத்தின் கொண்டாட்ட புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அத்துடன் வித்தியாசமான ஒரு நண்பர்கள் தின கொண்டாட்டமும் நம் கவனத்தை ஈர்த்தது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! 3 நாற்காலிகள் 7 நாற்காலிகளாக மாறியது எப்படி? மேடையில் நடந்தது என்ன?
திராவிட நண்பர்கள் விழா
"திராவிட நகர இயக்கம் என்ற அமைப்பு சார்பில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் திராவிட நண்பர்கள் விழா நடத்தப்பட்டது. குப்பம் பகுதியில் அமைந்து இருக்கும் திராவிட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 4 மொழிகளை பேசும் மக்கள், செயற்பாட்டாளர்கள், மொழி ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களுடைய மொழிகளில் பேசினர்.
திராவிட உரிமை
இதில் மாநில சுயாட்சி, இந்தி மொழி திணிப்பு, தென் மாநில மக்கள் ஒற்றுமை, தென் மாநில அரசியல், பிரச்சனைகள் குறித்து இதில் கலந்துகொண்டவர்கள் உரையாற்றினார்கள். குறிப்பாக இந்த கூட்டத்தில் திராவிட மொழி பேசும் மக்களுக்கு என்று தனியாக திராவிட நகரம் என்ற பெயரில் நகரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
திராவிட மாநிலங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை பேசும் மக்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 6 மாநிலங்களில் இந்த மொழிகள் பேசப்படுகின்றன. இந்த நிலையில் திராவிட மக்கள் ஒன்றுகூடுவதற்கு என்றே திராவிட நகரம் என்ற நகரத்தை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
திராவிட நகர இயக்கம்
இந்த நிலையில், தமிழ்நாடு, ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் எல்லையாக ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதி இருக்கிறது. இங்குள்ள திராவிட பல்கலைக்கழகத்திலேயே இந்த நிகழ்ச்சியை இந்த இயக்கம் நடத்தி இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள 50 கி.மீ. பரப்பளவு பகுதியை திராவிட நகரம் என்று அறிவிக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கோரிக்கை. அதை முன்வைத்தே திராவிட நகர இயக்கம் அமைக்கப்பட்டது.
கோரிக்கைகள்
திராவிட நகரத்தை உருவாக்கி உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசின் கிளை அலுவலகங்களை திறக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. திராவிட மொழிபேசும் மக்களிடம் நட்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், இங்குள்ள சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தி கலாச்சாரத்தை சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.