பழிவாங்க வேண்டும் பேச்சு... மோடி 'சகா' அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!
டெல்லி: முசாபர்நகர் கலவரத்துக்காக பழிவாங்கும் வகையில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜாட் சமூகத்தினரை தூண்டிவிட்டுப் பேசிய பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷாவு தற்போது பாஜகவின் உ.பி. மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாட் சமூகத்தினரிடையே பேசிய அமித் ஷா, முசாபர்நகர் கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் ஓட்டுப் போட்டுவிட வேண்டும். நமக்கு மானம்தான் மிக முக்கியம் என்றெல்லாம் பேச சர்ச்சையாகிப் போனது.
ஹிந்து, முஸ்லிம்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அமித் ஷா பேசியதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அமித் ஷாவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் அமித் ஷா மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சி.டி.யையும், அந்தச் சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையையும் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு மாநில தேர்தல் அலுவலர் அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.