For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் மீண்டும் ரத்து- தேர்தல் வரலாற்றில் முதல் முறை...

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு ஜூன் 13-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் இரு தொகுதிகளிலும் தற்போதைய நிலைமையில் தேர்தலை ரத்து செய்வதே சிறந்தது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்படி தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பையே ரத்து செய்வது என்பது இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் மே 16-ந் தேதியன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு மே 23-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் 232 தொகுதிகளுக்கு மட்டுமே மே 16-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

ECI rescinds poll notification for Aravakurichi, Thanjavur constituencies

இந்த வழக்கின் விசாரணையின் போது, இரு தொகுதிகளிலும் ஜூன் 13-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து இறுதி முடிவெடுக்க அறிவுறுத்தியது.

மேலும் ஆளுநர் ரோசய்யாவும் ஜூன் 1-ந் தேதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஜூன் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் நிலைமை சீரான பின்னர்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணம் தாராளமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இரு தொகுதிகளிலும் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் இப்போதைக்கு ரத்து செய்வதே சிறந்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய வரலாற்றில் இப்படி தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

English summary
The Election Commission of India has decided to rescind the poll notification for Aravakurichi and Thanjavur constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X