பெருமழை, கடும் வெயில்... வாட்டி வதைத்த ‘எல் நினோ’ போயே போச்சு... அடுத்து ‘லா நினா’!
டெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மிக வலிமையாய் தோன்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வாட்டி வதைத்து வந்த எல் நினோ முடிவுக்கு வந்துவிட்டதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வந்தது எல் நினோ. அதிக மழை ஆகட்டும், கொளுத்தும் வெயில் ஆகட்டும் இரண்டிற்கும் விஞ்ஞானிகள் சொன்ன முக்கியக் காரணம் எல் நினோ.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் இயல்பை விட கூடுதலாக பதிவாகும் வெப்ப நிலையால், எல் நினோ ஏற்படுகிறது. இரண்டு முதல், ஒன்பது ஆண்டுகளுக்கு, ஒருமுறை, பசிபிக் கடல் பகுதியில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவது வழக்கம். அப்படி மாற்றம் ஏற்படும்போது, அந்த ஆண்டை, எல் நினோ ஆண்டு என, அழைக்கின்றனர். இது உலகம் தழுவிய பருவ நிலை ஆகும்.
கடல் மட்டம் உயர்வு...
கடந்தாண்டு பசிபிக் கடலில், சராசரி வெப்பத்தை விட 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூடுதலாக பதிவாகி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் கடல் மற்றும் மேற்பரப்பு நிர்வாகம் தெரிவித்தது. இதனால், வரலாறு காணாத மழை, வெள்ளம், வறட்சி மற்றும் வெப்பத்தால் உலகநாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. மேலும் பசிபிக் கடல் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வந்தது.
வலிமையான எல் நினோ...
இம்முறை தோன்றிய எல் நினோவானது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலிமையானது என விஞ்ஞானிகள் கூறினர். இதனால் ஆசியாவில் கடுமையான வானிலை மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது.
வானிலை மாற்றம்...
இதன் காரணமாக கடந்தாண்டு இறுதியில் தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதேபோல், இதுவரை இல்லாத அளவிற்கு இந்தாண்டு கோடையில் வெயில் புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
முடிந்தது எல் நினோ...
இந்நிலையில், உலக அளவில் கடுமையான தட்பவெப்ப நிலை மாறுபாட்டை ஏற்படுத்திய எல் நினோ முடிவடைந்து விட்டதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பசிபிக் கடற்பகுதியில் மீண்டும் இயற்கையான குளிர்ச்சி நிலவ துவங்கி உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அடுத்து லா நினா...
ஆனால், எல் நினோவைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் லா நினா எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது எல் நினோவைக் காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் அடுத்த குண்டைப் போட்டுள்ளனர்.
பஞ்சம், வறட்சி...
ஏற்கனவே, எல் நினோவால் இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவலம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது. வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.
விவசாயம் பாதிக்கும்...
இந்நிலையில், 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மேலும், இதனால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.