தடையை மீறிய பக்தர்கள்... 2கி பிளாஸ்டிக் பொருட்களைத் தின்ற பெண் யானைப் பலி
பத்தனம்திட்டா: சபரிமலைப் பகுதியில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப் பட்ட பெண் யானை ஒன்று பரிதாபமாகப் பலியானது.
கேரளாவின் புகழ் பெற்ற ஐய்யப்பன் கோவில் சபரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த மண்டல பூஜை கடந்தமாதம் நிறைவடைந்தது. இதற்காக உலகத்தின் பலப்பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்திருந்தனர்.
பொதுவாக இந்தக் காட்டுப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. எனினும் தடையை மீறி பலர் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறுப் பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு அம்மலைப் பாதையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இந்நிலையில் சபரிமலை அருகே உள்ள வலியானவட்டம் பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க பெண் யானை ஒன்றின் சடலத்தை வனத்துறையினர் கண்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இறந்த யானையின் உடலைப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் அதன் வயிற்றில் சுமார் 2கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
உணவிற்குப் பதிலாக பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்ட யானை கடந்த சில வாரங்களாக வேறு உணவு எதையும் சாப்பிட இயலாமல் அவதிப் பட்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் வயிற்றில் செரிமானம் ஆகாமல் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இறந்த யானையின் சடலம் கண்டெடுத்தப் பகுதிக்கு அருகிலேயே எரியூட்டப் பட்டது.