தாத்ரி படுகொலை.... இன்னொரு எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தார்
டெல்லி: டெல்லி அருகே மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் முதியவர் ஒருவரை மத வெறியர்கள் மிகக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்னொரு எழுத்தாளரும் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே புகழ் பெற்ற எழுத்தாளர் நயன்தாரா சேகல் இதே காரணத்திற்காக தனது சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்தார். தற்போது லலித் கலா அகாடமியின் முன்னாள் தலைவரான அசோக் வாஜ்பாயியும் தனது விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மட்டுமல்லாமல் உயிர் வாழவும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை. எனவே எனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பித் தருகிறேன் என்று வாஜ்பாயி கூறியுள்ளார்.
தாத்ரியில் முஸ்லீம் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கொடூரமாக மத வெறிக் கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து குறிப்பிட்ட அவர், தாத்ரி சம்பவம் மிக மோசமானது, மகிழச்சி தரவில்லை. மதவாதிகள் தொடர்ந்து கொலைகளில் ஈடுபடுவது வருத்தம் தருகிறது. பிரதமர் மோடி இதுதொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
சேகல் செய்தது சரிதான். பிரதமர் மிகவும் மோசமானமாவராக இருக்கிறார். எதற்குமே கருத்து சொல்லாமல் மெளனம் காப்பது அழகல்ல. இந்த நாட்டின் பன்முகத் தன்மை பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஏன் அவர் சொல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் வாஜ்பாயி.
74 வயதான வாஜ்பாயி இந்திக் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர் ஆவார். தாத்ரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் கூறியுள்ள விளக்கங்களையும் வாஜ்பாயி நிராகரித்துள்ளார். இவையெல்லாம் நமது நாட்டின் பன்முகக் கலாச்சார, மத கட்டமைப்புக்கு வேட்டு வைப்பவை என்று அவர் கண்டித்துள்ளார்.