மேக் இன் இந்தியா பிரசார திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவில் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான மேக் இன் இந்தியா பிரசார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
மத்தியில் பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். "மேட் இன் இந்தியா" என்ற நிலை உருவாகி உலக நாடுகளில் இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கருத்து.
இதனை செயல்படுத்தும் விதமாக "மேக் இன் இந்தியா" பிரசார திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது "மேக் இன் இந்தியா" லோகோவை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம் முழுவதும் பரப்புவதற்காக 'மேக் இன் இந்தியா' பிரசாரம் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான உறவு என்பது எளிமையாகும். இந்தியாவை விட்டு எந்த ஒரு நிறுவனமும் வெளியேறுவதை மத்திய அரசு விரும்பவில்லை.
முந்தைய அரசின் மீது அன்னிய நிறுவனங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். உலக நாடுகள் முதலீட்டுக்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா அத்தகைய முதலீடுகளை ஈர்க்கக் கூடிய இடமாக மாற வேண்டும். அன்னிய முதலீடு என்பது இந்தியாவின் முதல் வளர்ச்சிக் காரணி. இளைய தலைமுறையினருக்கு தொழில் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்க வேண்டும்.
ஜனநாயகமும் மக்கள் வளமும் தேவையும் ஒருங்கிணைந்த நாடு இந்தியா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் இளைஞர்கள். அவர்களது திறமையை மிகச் சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசு தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகளையே எடுக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக அரசின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த நிகழ்வில் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.