“10,000 திருடினேன்.. அந்த பணத்துல”.. போலீசிடம் கெத்தாக பேசிய திருடன்.. வைரலான வீடியோ!
திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரிடம் போலீஸ் வித்தியாசமாக விசாரணை நடத்தும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்ட நபரிடம், போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ மூலம் அந்த திருட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் மக்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார்.
பாவப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பணக்காரர்களிடம் திருடும் ராபின்ஹுட் ஹீரோக்களின் கதையை நிறையவே நாம் தமிழ் சினிமாவில் பார்த்துள்ளோம். சமயங்களில் நிஜத்திலும் அப்படிப்பட்ட ராபின்ஹுட்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.
தற்போது வைரலான வீடியோவில் உள்ள திருடனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்.

விசாரணை
சத்தீஸ்கள் மாநிலத்தில் பத்தாயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவத்தில் அந்நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் துர்க் நகர எஸ்.பி. அபிஷேக் பல்லவா என்ற அதிகாரி விசாரணை நடத்துகிறார். மிகவும் கடுமையாக இல்லாமல், மென்மையாகவே அந்த அதிகாரி பேசுகிறார்.

வித்தியாசமான பதில்கள்
பின்னாடி கைகள் கட்டப்பட்டது போன்ற தோற்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் நிற்கிறார். அவரைச் சுற்றிலும் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். எஸ்.பி. அபிஷேக் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் நிதானமாக, தெளிவாக பதில்களைக் கூறுகிறார் அந்நபர். அவர்களுக்கு இடையேயான உரையாடல் இப்படியாகச் செல்கிறது.

தவறுக்கு வருத்தம்
'திருடிய பிறகு எப்படி உணர்ந்தாய்?' எனக் கேட்கிறார் எஸ்.பி. அதற்கு கைது செய்யப்பட்ட அந்நபர், 'முதலில் அது நன்றாக இருந்தது, ஆனால் அதற்காகப் பின்னர் வருத்தப்பட்டேன்' என்கிறார். 'ஏன் வருத்தப்பட்டீர்கள்...' என எஸ்.பி. கேட்க, 'நான் ஒரு ஒரு தவறு செய்துவிட்டேன்' என்கிறார் அந்நபர்.

ஏழைகளுக்கு உதவி
அதன்பிறகு, 'சரி எவ்வளவு பணம் திருடினாய்?' என்ற கேள்வியை முன்வைக்கிறார் எஸ்.பி. அதற்கு அந்நபர், '10,000 ரூபாய்' என்று கூறுகிறார். 'அந்த பணத்தை என்ன செய்தாய்?' என்று போலீஸ் கேட்க, 'ஏழைகளுக்கு கொடுத்துவிட்டேன்' என்று அந்நபர் கூறுகிறார். இந்த பதில் அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

ஆசிர்வாதம் கிடைத்தது
பிறகு தொடர்ந்து பேசும் அந்நபர், 'தெருவோரங்களில் குளிரில் நடுங்கும் மாடு, நாய், சில மனிதர்களுக்கு போர்வைகளை அப்பணத்தில் வாங்கிக் கொடுத்தேன்' என்கிறார். இதைக் கேட்ட எஸ்.பி., 'உனக்கு ஆசீர்வாதம் கிடைத்ததா?' எனக் கேட்கிறார். அதற்கும் சளைக்காமல் அந்நபர், 'ஆசீர்வாதம் கிடைத்தது சார்' எனப் பதிலளிக்கிறார்.

வீடியோ வைரல்
இந்த உரையாடலைக் கேட்டு அருகில் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். ஆனால் கேள்வி கேட்பவராகட்டும், பதில் கூறுபவராகட்டும் மிகையில்லாமல், இயல்பாகவே பேசுகின்றனர். இந்த விசாரணை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், 'திருடன் நிஜம்தான் சொல்கிறார். அவர் முகமே பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கிறது' எனக் கமெண்ட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications