உறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்!
கொல்கத்தா: மேற்குவங்க தேசிய பூங்காவில் உடலுறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகத்தை, இரண்டு ஆண் தங்களது கொம்புகளால் முட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ளது ஜல்தபாரா தேசிய பூங்கா. இந்த பூங்காவில் காண்டாமிருகங்களும் உள்ளன. அவற்றில் பெண் காண்டாமிருகம் ஒன்றிற்கு பிறந்த குட்டி ஒன்று அண்மையில் உயிரிழந்தது. இதனால் சோகமான மனநிலையில் பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளது தாய் காண்டாமிருகம்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு ஆண் காண்டாமிருகங்கள் அந்த பெண் காண்டாமிருகத்துடன் உறவு கொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கு பெண் காண்டாமிருகம் சம்மதிக்காததால், அவற்றிற்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த ஆண் காண்டாமிருகங்கள், தங்களது கொம்புகளால் பெண் காண்டாமிருகத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூங்கா காவலர்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அந்த சத்தத்திற்கு அஞ்சாத ஆண் காண்டாமிருகங்கள், அந்த பெண் காண்டாமிருகத்தை குத்திக் கொலை செய்தன.
பெண் காண்டாமிருகம் உயிரிழந்த பிறகும், ஆவேசம் அடங்காத ஆண் காண்டாமிருகங்கள் அதன் அருகிலேயே அமர்ந்திருந்ததாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே பெண் காண்டாமிருகத்தின் உடலை மீட்டு, அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது இந்திய வன வரலாற்றில் அரிய அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒன்று என்றும், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications