'டைம்ஸ் நவ்' பெண் நிருபரை ஆபாசமாக திட்டிய கர்நாடக எம்எல்ஏ.. கோதாவில் குதித்த அர்னாப் கோஸ்வாமி
மும்பை: 'டைம்ஸ் நவ் பெண் செய்தியாளரை மரியாதை குறைவாக பேசிய கர்நாடக எம்.எல்.ஏ அசோக் கெனி மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மக்கள பக்ஷா என்ற பெயரில் கட்சி தொடங்கி, பீதர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளவர் அசோக் கெனி.
நந்தி என்ற நிறுவனத்தின் தலைவரான இவர் மல்லையா போன்றே கர்நாடகாவை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபராகும். பெங்களூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டத்தை இவரது நிறுவனமே செயல்படுத்தி வருகிறது.
குதிரை பேரம்
ராஜ்யசபா தேர்தலையொட்டி கர்நாடக சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு டிமாண்ட் அதிகரித்து குதிரைபேரம் நடைபெறும் நிலையில், மும்பையில் அசோக் கெனி உள்ளிட்ட 13 எம்எல்ஏக்களை காங்கிரஸ் மேலிடம் கூட்டி வந்து ஹோட்டலில் தங்க வைத்தது.
திரும்ப திரும்ப கேள்வி
தகவல் அறிந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின், மும்பை பிரிவு தலைமை நிருபர் மேகா பிரசாத், அந்த ஹோட்டலுக்கு சென்றார். அசோக் கெனி அவரின் அருகே சிக்கவும், குதிரை பேரம் குறித்து மேகா திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்.
தகாத வார்த்தை
பதிலளிக்க விரும்பாத அசோக் கெனி அங்கிருந்து நடக்க தொடங்கினார். ஆனால் மேகா பிரசாத்தோ, அவரை விடாமல் பின்தொடர்ந்து மைக்கை நீட்டியபடி கேள்வியை கேட்டபடியே இருந்தார். பொறுமை இழந்த அசோக் கெனி, அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்களை நோக்கி, "இந்த **** மகளை பிடித்து ஜெயிலில் போடுங்கள்" என்ற அர்த்தத்தில் வரும் ஹிந்தி வார்த்தையை கூறிவிட்டு நடையை கட்டினார்.
வழக்கு பதிவு
இதனால் அதிர்ச்சியடைந்த மேகா பிரசாத், சாந்தா குரூஸ் காவல் நிலையத்தில், அசோக் கெனிக்கு எதிராக புகார் அளித்தார். இதைடுத்து ஐபிசி பிரிவு 509-ன்கீழ் (பெண்ணின் மாண்பை குலைக்கும் வகையில் பேசுவது) அசோக் கெனிக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோதாவில் அர்னாப்
முன்னதாக, டைம்ஸ் நவ் சேனல் தலைமை எடிட்டர், அர்னாப் கோஸ்வாமி, அசோக் கெனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, பெண் நிருபரிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
பதில் கன்டிஷன்
மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக கூறிய அசோக் கெனி, அதற்கு முன்பாக, தன்னிடம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்த பெண் நிருபர் மேகா பிரசாத்தை மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும் என்று பதிலுக்கு கோரிக்கை வைத்தார்.
கேள்வி கேட்பதே வேலை
அசோக் கெனியின் கோரிக்கையை ஏற்க மறுத்த அர்னாப் கோஸ்வாமி, தனது நிருபர் மீது எந்த தவறும் இல்லை என்றும், கேள்வி கேட்பதுதான் பத்திரிகையாளரின் வேலை என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை எனவும் கூறினார்.
உலகமே பார்க்கும்
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று காட்டமாக பதிலளித்த அர்னாப் கோஸ்வாமி, மக்கள் பிரதிநிதி ஒருவர் பெண் பத்திரிகையாளரிடம் எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்தி பேசுகிறார் என்பதை டிவியில் ஒளிபரப்ப வேண்டிவரும். இந்தியா மற்றுமின்றி உலகமெங்கும், உங்களது செயல்பாடு மக்களால் பார்க்கப்படும் என்றும் கூறிய அர்னாப், மன்னிப்பு கடிதம் எழுதி தந்தால் மட்டுமே அந்த விவகாரத்தை மறக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஒளிபரப்பு
ஆனால், மேகா பிரசாத் மன்னிப்பு கேட்டால் தானும் கேட்பதாக அசோக் கெனி தொடர்ந்து கூறியதை தொடர்ந்து, அர்னாப் கோஸ்வாமி, அந்த உரையாடலை முடித்துக்கொண்டார். வீடியோவில் பதிவான அந்த சம்பவம் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. இதன்பிறகே போலீசில் புகார் தரப்பட்டது.