16வது லோக்சபா கூட்டத்தொடர்: முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்நாள் ஒத்திவைப்பு!!
டெல்லி : 16வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 46 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை கடந்தவாரம் பதவியேற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று 16-வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப் பட்டது. இது குறுகிய கால கூட்டத்தொடர் ஆகும்.
தற்காலிக சபாநாயகர்...
முன்னதாக தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்.பி. கமல்நாத் பதவி இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் கூட்டத் தொடர்...
பின்னர், 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத், தலைமையில் சபை தொடங்கியது. நாடாளுமன்றச் செயலாளர் பி.ஸ்ரீதரன், 16-வது லோக்சபா அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பை வாசித்தார்.
இரங்கல்....
இதையடுத்து நேற்று டெல்லி சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை தற்காலிக சபாநாயகர் கமல்நாத் வாசித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கமல்நாத் அறிவித்தார். நாளை முதல் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பர்.
எம்.பிக்கள் பதவியேற்பு...
லோக்சபா தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவி ஏற்பதாக முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், இன்று சபை ஒத்தி வைக்கப்படுவதால், எம்.பி.க்கள் நாளையும், நாளை மறுதினமும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
சபாநாயகர் தேர்வு...
ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளைமறுதினம், புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகராக பாஜக மூத்த எம்.பி. சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.வின் டெல்லி விஜயம்...
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில எம்.பிக்களும் டெல்லி சென்றுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றிருந்ததால், அவரை வரவேற்கும்வண்ணம் முன்கூட்டியே அதிமுக எம்.பிக்கள் டெல்லி சென்று விட்டனர்.
ஜனாதிபதி உரை...
வரும் 9ம் தேதி ராஜ்யசபாவும் கூடுகிறது. அன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா இணைந்த கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆற்ற உள்ளார். அப்போது அவர் புதிய மத்திய அரசின் செயல்திட்டங்களை எடுத்துரைப்பார்.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்...
பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடக்கும். அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார். அவர் லோக்சபாவில் 10-ந் தேதியும், ராஜ்யசபாவில் 11-ந் தேதியும் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைவு...
அதனைத் தொடர்ந்து 11-ந் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும்.