இன்ஸ்பெக்டரை உட்கார வைத்து யூனிபார்முடன் குளிப்பாட்டிய பெண்கள்.. மழை வேண்டி நடந்த நூதனப் பிரார்த்தனை
கோரக்பூர்: இந்திய மக்களிடம்தான் எத்தனை வகையான மூட நம்பிக்கைகள் குவிந்து கிடக்கின்றன. உத்திரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மா்வட்டத்தில் வறட்சி பாதித்த ஒரு பகுதியில், மழை பெய்ய வேண்டி, அந்த ஊர் மக்கள் சேர்ந்து ஊர் இன்ஸ்பெக்டருக்கு சீருடையிலேயே குளியல் நடத்தி வேண்டிக் கொண்ட வினோத நிகழ்ச்சி நடந்துள்ளது.
சித்தார்த் நகர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கூத்து. அந்த ஊரில் மழையே இல்லை. வறட்சிதான். இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த ஊர் இன்ஸ்பெக்டருக்கு பொது இடத்தில் குளிப்பாட்டி பூஜை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அந்தக் காலத்தில் ராஜாவுக்கு பொது இடத்தில் இவ்வாறு குளியல் நடத்துவார்கள். பெண்கள் சேர்ந்து ராஜாவைக் குளிப்பாட்டுவார்கள். இப்போது ராஜாகள் இல்லை. எனவே அலிகர்வா கபிலவஸ்து காவல் நிலைய இன்ஸ்பெக்டரையே ராஜாவாக கருதி நாங்கள் அவருக்கு இந்த மரியாதையைச் செய்தோம்" என்றார்.
சீருடையிலேயே...
இந்த நிகழ்ச்சியின்போது அந்த இன்ஸ்பெக்டரை அவரது சீருடையிலேயே பொது இடத்தில் உட்கார வைத்து பெண்கள் கூடி குளிப்பாட்டினர். பின்னர் அவருக்கு சாஸ்திரப்படி சடங்குகளையும் செய்தனர். இந்துக்கள், முஸ்லீம்கள் என மத பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
சுத்தபத்தமாக...
குளிப்பாட்டி முடித்ததும் அந்த இன்ஸ்பெக்டரிம், 3 நாட்களுக்கு லஞ்சம் வாங்காமல் "சுத்தபத்த"மாக இருக்குமாறும் ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதுதான் ஹைலைட்டாகும்.
முதலில் தயக்கம்...
இந்த குளியலுக்காக அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பெண்கள் குடம் குடமாக தண்ணேீருடன் வந்து சேர்ந்தனர். இன்ஸ்பெக்டர் ரன்விஜய் சிங்குக்கு குளியல் நடத்தினர். முதலில் இந்த குளியலில் கலந்து கொள்ள தயங்கினாராம் இன்ஸ்பெக்டர். இருப்பினும் பெண்கள் கேட்டுக் கொண்டதால் சம்மதித்தாராம்.
பெண்களின் கோரிக்கை...
கண்களில் நீர் வழிய பெண்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததால் என்னால் தட்ட முடியவில்லை என்று கூறுகிறார் இன்ஸ்பெக்டர் சிங்.
மழையும் பெய்தது...
இந்த நிகழ்ச்சி நடந்ததும் அந்த ஊரில் மழை பெய்ததாம். இதனால் அந்த இன்ஸ்பெக்டரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்தான் எங்களுக்குக் கடவுள் போல. எங்களை அவர்தான் காக்க வேண்டும் என்றும் புல்வாரியா என்ற பெண் கூறுகிறார்.